விருதுநகர்: ``முன்னேற விழையும் மாவட்டங்களின் வரிசையில் முதலிடம்!” - மத்திய நிதியமைச்சர் https://ift.tt/qPjDN48

மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகம் சார்பில், ஸ்வான்நிதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,274 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

நிதியமைச்சர்

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "ஏழை எளிய மக்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக அவர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட திட்டம் ஸ்வான் நிதி. ஸ்வான்நிதி என்றால், 'சுயமான நிதி' எனப்பொருள். அரசின் நலத்திட்ட பொருளுக்காக வரிசையில் நிற்கிற கடைநிலை மனிதர்கள் வரையும் இந்த திட்டத்தின் பயனை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவர்களும் சுய தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். இந்த உலகமே உரிமை கோரல் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகிய இரண்டை வகையை சார்ந்துதான் ஈர்க்கப்படுகிறது.

தனக்கான உரிமையை கேட்டுப்பெற்று, தேவையானவற்றை உருவாக்கிக் கொள்வது ஒரு வகை என்றால், சுய சக்தியாக உருவெடுத்து, வளர்வதற்கான அடிப்படை சாதனங்கள் அனைத்தையும் கிடைக்க செய்வது அதிகாரமளித்தல் வகையாகும். இங்குள்ள ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன், சுய உழைப்பில் உயர்ந்து நிற்பதற்கு அதிகாரமளிக்கும் திட்டமாகத்தான் ஸ்வான் நிதி திட்டம் உள்ளது. சாலை வசதி முதல் ஆரம்ப சுகாதாரம் வரை அனைத்து நிலைகளிலும் மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டிய நலத்திட்டங்கள் அடிப்படையில் நாடு முழுவதும் 116 மாவட்டங்கள் முன்னேற விழையும் மாவட்டங்களாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டன.

பேச்சு

முன்னேற விழையும் மாவட்டமென்பது மக்களுக்கான அடிப்படை சாதனங்கள் இன்னுமும் அனைவருக்கும் சரிசமமான முறையில் போய் சேரவில்லை, அதை சரியாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதுதான். எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களும் ஆராய்ந்து மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் இந்திய அளவில் முன்னேற விழையும் மாவட்டங்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்து அதற்கான விருதையும் பெற்றிருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு முறை பேசுகையில், மத்திய அரசு மக்களுக்காக 100 ரூபாய் கொடுக்கிறது என்றால் அதில் 15 ரூபாய் மட்டுமே சம்பந்தப்பட்ட நபருக்கு போய் சேருகிறது. மீதி 85 ரூபாய் எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை என பேசி இருக்கிறார். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே டிஜிட்டல் இந்தியா நடைமுறையில் ஏழை மக்கள் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்க மத்திய அரசு திட்டம் வகுத்தது. வங்கி கணக்கு மூலமாக சம்பந்தப்பட்ட பயனாளிக்கு மத்திய அரசால் கிடைக்கக்கூடிய திட்ட பயன்கள் நேரடியாக அதேநேரம் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய முடிகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்வான் நிதி திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூபாய் பத்தாயிரம் கடனுதவி பெற விண்ணப்பித்தவர்களில் இதுவரை 7,982 பேருக்கு முதல் தவணை கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 7,472 நபர்கள் தங்களுக்கான கடன் உதவிகளை பெற்றுள்ளனர். இரண்டாவது நிலையான 20 ஆயிரம் ரூபாய் கடனுதவி பெறுவதற்கான திட்டத்தின் கீழ், இதுவரை 1,773 பேருக்கு கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டதில், 1,688 பேர் கடனுதவி பணப்பட்டுவாடா வழங்கப்பட்டிருக்கிறது. 50 ஆயிரம் ரூபாய் கடனுதி பெறும் திட்டத்தில் இதுவரை 249 பேருக்கு கடன் வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு 242 பேர் கடன் பெற்றுள்ளனர்" என்றார்.

கடனுதவி

முன்னதாக, 3 மணிக்கு தொடங்கப்படுவதாக இருந்த நிகழ்ச்சி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகை தாமதத்தால் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக 4.30 மணிக்கு தொடங்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி மாலை சுமார் 6 மணி அளவில் முடிவுக்கு வந்தது. அப்போது, நிகழ்ச்சியின் நிறைவாக பாடப்படவேண்டிய 'நாட்டுப்பண்' இசைக்கப்படாமலேயே நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. இதற்கிடையில், விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து வரவேற்ற மாவட்ட ஆடசியர் ஜெயசீலன், கடனுதவி வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Tamilnadu News

About Shabbir Ahmad :

Lorem ipsum dolor sit amet, pericula qualisque consequat ut qui, nam tollit equidem commune eu. Vel idque gloriatur ea, cibo eripuit ex.
View All Posts By Shabbir !

0 Comments:

All Rights Reserved. 2014 Copyright PICKER

Powered By Blogger | Published By Gooyaabi Templates Designed By : BloggerMotion

Top