கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் தரக் கூடாது என்று சிவகங்கையில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு கோஷ்டிகள் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் எதிராக நிற்கிறார்கள்.
அதிலும் சிவகங்கை மாவட்டத்தில் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் சமீபகாலமாக வரிந்து கட்டி நிற்கிறார்கள்.

`ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்' என்ற தலைப்பில் சிவகங்கையில் தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ என்.சுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஜெய் சிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ப.சிதம்பரம் ஆதரவாளரான மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவில்லை.
`ராகுல் காந்தியை பிரதரமராக்க பாடுபடுவோம்' என்று பேசியவர்கள், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் கொடுக்கக் கூடாது, மோடியை புகழ்ந்து பேசிய அவர்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் இம்முறை தி.மு.க போட்டியிட வேண்டும் என்று மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் தங்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகக் கிளம்பியிருக்கின்றனர்.
from Tamilnadu News
0 Comments: